Friday, November 5, 2010

தீபாவளி !!!

தீபாவளி இன்று .....
தம்பி கேட்டான் ஏன் குழந்தைகளோடு பட்டாசு கொளுத்தவில்லை என்று
சொன்னால் புரியுமா அவனுக்கு ... !!!
சாட்டையை கண்டால் பிஞ்சு விரல்கள் நியாபகம் வருகிறது ...
புஸ்வானம் கண்டால் புகை சுவாசிக்கும் பிஞ்சு முகம் நியாபகம் வருகிறது ...
மத்தாப்பு கண்டால் கந்தக கரை படிந்த கைகள் நியாபகம் வருகிறது ...

சங்கு சக்கரம் கண்டால் எண்சாண் வயிறுக்காய் கந்தக பூமியில் வேகும் பிஞ்சுகள் நியாபகம் வருகிறது ...
இங்கே  குழந்தைகள்  காசை கரி ஆக்குகிறது ....
அங்கே குழந்தைகள் கரியால் காசு ஆக்குகிறது ..
இங்கே குழந்தைகள் தீப திருநாளில் மாசு காற்றை சுவாசிக்கிறது
அங்கே குழந்தைகள் தீப திருநாளில் மட்டும் தான் நல்ல காற்றை சுவாசிக்கிறது
இறைவா ....என்று தீரும் இந்த சாபம்?

Thursday, July 15, 2010

கனவு உலகம்

ஆரோகியமான உணவு
சுகமான உறக்கம்
பாதுகாப்பான உறைவிடம்
மின் கருவிகளின் சத்தம் இல்லாத அறை
வாகனங்கள் மாசுபடுத்தாத சுற்றுபுறம்
போட்டி பொறாமை இல்லாத உலகம்
மானுடம் சாகாத வாழ்க்கை
அம்மாவின் கருப்பை !

கலப்படம் இல்லா அன்பு
கள்ளம் இல்லா நட்பு
களங்கம்  இல்லா சிரிப்பு
மனதை கொள்ளை கொள்ளும்  குறும்பு
குழந்தை மனது !!!

ஏ  கடவுளே .. வரம் தா .

என் குழந்தைக்கு நான் குழந்தை யாக !!

 

Thursday, May 27, 2010

பாரபக்ஷம்

இறைவா உன் படைப்பில் ஏன் இந்த பாரபக்ஷம் ??
ஆணும் பெண்ணும் சமம் என்று அர்த்தனாரியாக நின்றாய்
ஆனால் உனக்கும் தோன்றவில்லையே
ஆண் குழந்தையை ஆண் சுமக்கவும் பெண் குழந்தையை பெண் சுமக்கவும் ஆணையிட ?
இறைவன் ஆனாலும் ஆண் ஆண்தான் என்று நிருபித்து விட்டாயே ?

Saturday, April 3, 2010

சிகரட்

வீட்டின் தலை மகன் தனக்கு தானே கொள்ளி வைத்து கொள்கிறான் !
வாயில் சிகரட் !!!!!!!

Monday, March 29, 2010

என்னுயிர் தோழிகளுக்கு சமர்ப்பணம் !

இந்த பூமியில் பிறந்த போது அம்மாவின் கருப்பை பாதுகாப்பு முடிந்து போனதை நினைத்து பயம் !
மழலையாக இருந்த போது தாயின் பூச்சாண்டி கதைகளை
நினைத்து  பயம் !
பள்ளி பருவத்திலோ ஆசிரியை , மதிப்பெண்கள் ,  புத்தக சுமையை
நினைத்து பயம் !
கல்லூரி பருவத்தில் தோழிகள் பட்டாம்பூச்சியை திரைப்படம்,கேளிக்கை என இறக்கை விரித்து பறக்க ,
உனக்கு உன் தந்தை என்ன சொல்வரோ என்று
 நினைத்து பயம்!
நாளொரு பேஷன் , பொழுதொரு வண்ணமாய் கல்லூரி வண்ண மயமாய் இருக்க ,
சிறிய  பொட்டு வைக்க கூட தடை சொல்லும் தாயின் கண்டிப்பை
 நினைத்து பயம் !
அம்மாவை காண மனது துடித்தும் போகாதே என்று சொல்லும் கணவனை மீறி
போக முடியாத பயம் !
தோழியை தொலை பேசியில் அழைக்க நினைத்தாலும் கணவனின் பாராமுகம்
நினைத்து பயம் !
பல மாதங்கள் கழித்து உனக்கே உனக்காய் சில தருணங்களில் வெளியே செல்ல எல்லாவரிடமும் அனுமதி கேட்க பயம் !
நீ பிறந்ததில் இருந்து இன்று வரை
நீ மற்றவர்களுக்கு பயந்து பயந்து வாழ்கையின் பாதி தூரம் கடந்து விட்டாய் !
உன் வாழ்கையை இன்றும் மற்றவர்கள் தான் வாழ்கிறார்கள் !
எப்பொழுது  நீ உன் வாழ்கையை வாழ போகிறாய் ?????

Thursday, March 18, 2010

குளோபல் வார்மிங் ! வெப்ப மயமாதல் !

பாட்டு , பரத நாட்டியம் , கீ போர்டு , போநேடிக்ஸ் ....
அடுத்த வீட்டு குழந்தையின் மதிப்பெண்கள் ...
பள்ளிகூடத்தில் பரிக்ஷை ...
ஸ்போர்ட்ஸ் டே ஆயத்தங்கள் ..
இப்படி பல கவலை அம்மாக்களுக்கு ...
அம்மா வாங்கி குடுத்த மயில் இறகு எப்போ குட்டி போடும் ?
இன்னிக்கு விளையாட மைதிலி வருவாளா ?
காலம்பற கார் கிட்ட இருந்த பூனை குட்டி இப்போ இருக்குமா ?
இப்படி கவிதை கவலைகள் மழலைக்கு ....
பட்டாம்பூச்சிக்கு வர்ணம் பூச வேண்டாம் - குறைந்த பக்க்ஷம் சிறகு முறிக்க வேண்டாமே?
கிளிகளுக்கு பறக்க சொல்லி குடுக்க வேண்டாம் - குறைந்த பக்க்ஷம் கூண்டில் அடைக்க வேண்டாமே ??
குழந்தைகள் உலகத்தில் பரவும் வெப்ப மயமாதல்எப்போது குறையும் ??

Thursday, March 4, 2010

பெண் சுதந்திரம் ??

பெண் விடுதலை கிடைத்துவிட்டதாம்
நம்ப சொல்கிறார்கள் !
இப்போதும் பெண் குழந்தை பிறக்கும்போது அழுகின்ற ஓசை கேட்டு கொண்டுதான் இருக்கிறது !
இப்போதும் பெண் குழந்தைக்கு தங்கம் சேர்க்கும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் !
இப்போதும் பெண் அப்பா, அண்ணன்,தம்பி,கணவன்,மகன் என்ற உறவுகளுக்கு கட்டுபடத்தான் வேண்டி இருக்கிறது !
இப்போதும் சில இடங்களில் மருமகள் அக்னிப்ரவேசம் செய்யத்தான் வேண்டி இருக்கிறது !
இப்போதும் ருசிக்கா போன்ற பெண்களுக்கு நீதி கிடைக்க போராடத்தான் வேண்டி இருக்கிறது !
இப்போதும் பெண்கள் பல இடர்கள் , கேலி பேச்சுக்கள் எல்லாவற்றையும் தாண்டி தான் முன்னேற வேண்டி இருக்கிறது !
இப்போதும் ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களுக்கும் பெண்ணை காட்டும் கேலி கூத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது !
ஹே பாரதி !
பெண்மையை போற்றினாய் ! பெண் சுதந்திரம் வேண்டும் என்று வேண்டினாய் !
பெண்ணுக்காய் கனவு கண்டாய் !
என்று நனவாகும் உன் கனவு ?

Sunday, February 28, 2010

காலம்

மழையின் சாரல்
மழலையின் சிரிப்பு
மலரின் வாசம்
இவைகளை தேடி சந்தோஷித்தது பட்டாம்பூச்சி காலம் ....
சனியன் புடிச்ச மழை நேரம் காலமே தெரியாது - வாகனங்களின் அணிவகுப்பில் அலுவலக அவசரத்தில் நான் ...
விளையாட வாம்மா - என் மழலையின் கொஞ்சலான அழைப்பு
அலுவலக தொலை பேசி அழைப்பின் அவசரத்தில் நான்....
வீடு முழுவதும் பூத்திருக்கும் ரோஜாவின் வாசம்
வீடெல்லாம் ஒரே பூச்சி இந்த செடிய கொஞ்சம் வெட்டணும் ..
வீட்டை கவனிக்கவே நேரம் இல்லாத நான் .....
காலத்தின் மாற்றத்தில் நான் தொலைத்தது என் ஆசைகளையா ?
இல்லை என்னுள் இருந்த மனித உணர்வுகளையா
பதில் தேட சமயம் இல்லாத அவசரத்தில் நான்... !!!

Thursday, February 25, 2010

எது சுதந்திரம் ?

என்று கிடைத்தது நமக்கு சுதந்திரம் ?
வெள்ளையர்கள் வெளியேறிய தினமா ?
கருத்து சுதந்திரம் கிடைத்த தினமா ??
எழுத்து சுதந்திரம் கிடைத்த தினமா ??
தொழில் சுதந்திரம் கிடைத்த தினமா ??
பெண் சுதந்திரம் கிடைத்த தினமா ??
என்று கிடைக்குமோ சாதி சுதந்தரம் அன்றே சுதந்திர தினம் !

Wednesday, February 24, 2010

ஞானி !

முற்றும் துறந்தவன் ஞானி என்று சொன்னார்கள்
ஞானி என்பவன் யார் என்று கேட்டேன்
மெய் உணர்ந்தவன் ஞானி என்றார்கள்
சொந்தங்கள் துறந்தவன் ஞானி என்றார்கள்
தேவைகள் குறைந்தவன் ஞானி என்றார்கள்
காண கிடைக்காத பிறவியவன் என்றார்கள்
அப்படி ஒருவனை சாலையில் கண்டபோதோ.....
பைத்தியக்காரன் என்றார்கள் !!!!!

வாழ்க்கை

வாழ்க்கை எனும் சிலந்தி வலையில் விட்டில் பூச்சியாக நான் !
வாழ்கையின் மையத்தை அடைந்து விட்ட இருமாப்பு எனக்கு !
நான் வாழ்க்கையை வெற்றி கொள்ள போகிறேனோ வாழ்க்கை என்னை வெற்றி கொள்ள போகிறதோ ?
என்னை விழுங்க காத்திருக்கும் விதி எனும் சிலந்திக்கே வெளிச்சம் !!!